இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம்: பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை

திங்கள், 7 அக்டோபர், 2013

இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோவையில் நேற்று (06.10.2013) அளித்த பேட்டி:

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. அனைத்து மக்களும் இனம், மதம், மொழி, நிறம், அரசியல், நீதி, நிர்வாகம் அனைத்திலும் சுதந்திரமாக இருந்தால்தான் அந்த நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த முடியும். ஆனால் இதில் ஒன்றைக்கூட இலங்கை பின்பற்றவில்லை.

சிறுபான்மையாக உள்ள தமிழரை இலங்கை அரசு கொன்று குவித்துள்ளது. எனவே இலங்கைக்கு காமன்வெலத் மாநாட்டை நடத்த உரிமை இல்லை. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறாமல் இந்தியா தடுக்க வேண்டும். அப்படியே அங்கு காமன்வெல்த் மாநாடு நடந்தாலும் இந்தியா அதில் பங்கேற்க கூடாது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் தமிழர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம். 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மதித்து இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என எச்சரிக்கை விடுக்கிறேன் என கூறினார்.

பேட்டியின் போது மாநில துணை பொதுச்செயலாளர் தமிழ்நேசன் உடன் இருந்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP