கொழும்பில் நடைபெறும் ஆசிய அளவிலான கட்சிகள் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம்

வியாழன், 18 செப்டம்பர், 2014







தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இனப்படுகொலையாளன் ராஜபக்சே தொடங்கி வைக்கும் கொழும்பு மாநாட்டில் பாஜக பங்கேற்புக்கு கடும் கண்டனம்:

தமிழினப் படுகொலையாளன், போர்க்குற்றவாளி ராஜபக்சே இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று 18.09.2014 தொடங்கி வைக்கும் ஆசிய அளவிலான கட்சிகள் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் மிக நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை படுகொலை செய்ய உதவி புரிந்தது.

அதன் பின்னர் அமைந்துள்ள மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முந்தைய காங்கிரஸ் அரசை அடியொற்றியே ஈழப் பிரச்சனையில் அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தமது பதவியேற்பு விழாவுக்கு கொடியவன் ராஜபக்சேவை அழைத்தார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து ஈழத் தமிழர் பிரச்சனையில் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அதே கதைக்கு உதவாத, ஈழத் தமிழருக்கு எந்த ஒரு நன்மையும் விளைவிக்காத வெளியுறவுக் கொள்கையைத்தான் பாஜக அரசு கடைபிடித்து வருகிறது.

இதன் உச்சமாக மத்திய அரசில் எந்தப் பதவியிலுமே இல்லாத பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கு இந்தியப் பிரதிநிதி போல சென்று வருகிறான். அவன் ராஜபக்சேவை சந்தித்து பேசிவிட்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இதுதான் என்றெல்லாம் பேசுகிறான். இந்திய பிரதிநிதிபோல பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி பேசுவதை இதுவரை பாரதிய ஜனதா மேலிடமும் கண்டித்தது இல்லை. மத்திய அரசும் கண்டித்ததும் இல்லை. அதற்கு மாறாக அவனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது மத்திய அரசு. இதன் மற்றொரு உச்சமாக இலங்கையில் இனப்படுகொலையாளன் ராஜபக்சே தொடங்கி வைக்கும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சி தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது.

 அதுவும் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிய மாநிலமான தமிழகத்தின் பாஜக பொறுப்பாளர் முரளிதரராவை தேர்ந்தெடுத்து பாஜக மேலிடம் அனுப்பியுள்ளது. அப்படியெனில் தமிழக அரசு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் வக்கிரமான செயலைத்தானே பாரதிய ஜனதா கட்சி செய்கிறது. காயப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தின் உணர்வுகளைத்தானே கிளறிக் கொண்டிருக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற நடவடிக்கைதானே இது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளிலே கூட ராஜபக்சேவை அனுமதிக்கக் கூடாது என்று தமிழகம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் முக்கியத்துவம் அற்ற ஒரு அமைப்பின் அரசியல் கட்சிகள் மாநாட்டுக்கு பாரதிய ஜனதா தனது மேலிடப் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?

தன்னைப் போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்கவே காமன்வெல்த் மற்றும் முக்கியத்துவம் அற்ற எத்தனை சர்வதேச நாடுகளை உள்ளடக்கிய அமைப்புகள் இருக்கிறதோ அத்தனையையும் கொழும்பில் கூட வைத்துக் கொண்டிருக்கிறான் ராஜபக்சே என்பதைக் கூடவா பாரதிய ஜனதா கட்சி புரிந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் இருந்து இளம் விளையாட்டு வீரர்கள் கூட இலங்கைக்குப் போகக் கூடாது; அப்படிப் போகிறவர்களை திருப்பி வரவழைத்து அனுப்பக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த நிலையில் தமிழ்நாட்டின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் வகையில் ராஜபக்சே தொடங்கி வைக்கும் கொழும்பு ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டுக்கு பாஜக தமது பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சி அனுப்பி வைத்த இரண்டு பிரதிநிதிகளையும் உடனே திரும்ப அழைக்க வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியானது ஜாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து மிக மிகக் கடுமையான எதிர்ப்பை சந்தித்து காங்கிரஸைப் போல வீழ்த்தப்படும் என்று எச்சரிக்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP