நெய்வேலி பிரச்னையை தீர்க்காவிட்டால்... தமிழ்நாட்டில் நிரந்தர இருட்டு?

புதன், 27 அக்டோபர், 2010




                        ஆண்டுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்களை லாபமாக ஈட்டித் தரும் நிறுவனம், நெய்வேலி அனல் மின் நிலையம். இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களை ‘நிரந்தரத் தொழிலாளர்களாக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அனலாக பற்றியெறியும் இந்தப் பிரச்னை நெய்வேலியைக் கடந்தும் சென்று கொண்டிருக்க, மத்திய-மாநில அரசுகள் இதற்கு எப்படி அணை போடுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், இந்தப் பிரச்னையை அரசியலாக்கி ஆதாயம் தேடிக் கொண்டிருக்கின்றன பல்வேறு அரசியல் இயக்கங்கள்.

                       கடந்த செப். 19-ம் தேதி ஆரம்பித்த வேலைநிறுத்தம் ஒரு மாதத்தைக் கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. 
என்னதான் நடக்கிறது என்று நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரிடம் கேட்டோம்.

                            ‘‘அனல்மின் நிலையத்தில் 19 ஆயிரம் பேர் நிரந்தரமாக பணியில் இருக்கிறார்கள். 13 ஆயிரம் பேர் ஒப்பந்தப் பணியில் இருக்கிறார்கள். மொத்தமாக 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெய்வேலியில் இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்களும் அங்கேயே இருக்கின்றன.

                        மொத்தமாக 1.5 லட்சம் பேர் நெய்வேலியில் மட்டும் இருக்கிறார்கள். இந்த வாக்குகளை யார் பெறுவது என்பதில்தான் இப்போது பலத்த போட்டி. அதன் விளைவுதான், தற்போது நடந்து கொண்டிருக்கும் பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்தம்...’’ என்று பிரச்னையின் பின்னணியைத் தொட்டுப் பேசினார்.

                         ‘‘ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் 13 ஆயிரம் பேருக்கும் சமவேலைக்கு சம ஊதியம், சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம், முறையான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி.யின் ‘ஜீவா ஒப்பந்த தொழிலாளர் நலச் சங்கம்’தான் இந்தப் பிரச்னையை முதலில் கையில் எடுத்தது.

                               கடந்த செப். 19-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இதனால் கோபமடைந்த நிர்வாகம், ‘சட்டத்துக்குப் புறம்பாக போராட்டம் நடத்தப்படுகிறது... இதனை தடுத்து நிறுத்த வேண்டும்...’ என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘தொழிலாளர்களுக்கு போராட உரிமையுள்ளது. எனவே, இது சம்பந்தமாக தொழிலாளர் நல ஆணையம், தொழிற் சங்கங்கள், நிர்வாகம் ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும்...’ என்று ஆலோசனை கூறி தீர்ப்பு சொல்லிவிட்டது. ஆனால், இதனை நிர்வாகத் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. தொழிலாளர் பேராட்டத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தது.

                         இந்நிலையில் தான் போராட்டத்துக்கு ஆதரவாக தொ.மு.ச., சி.ஐ.டி.யு., டி.பி.ஐ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட 7 சங்கங்கள் திடுமென களமிறங்கி போராட்டத்துக்கு வலுசேர்த்தார்கள். இதனால் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் எனப் போராட்ட களம் தீவிரமாகிக் கொண்டே போகிறது.

                           இதன் உச்சகட்டமாகத்தான் அக். 19-ம் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. போராடிவரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்காக இதுநாள் வரை குரல் கொடுக்காத பா.ம.க., அ.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க., டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள், கடந்த 13-ம் தேதி மாபெரும் பேரணியை நடத்திய-தோடு, எதிரும் புதிருமாக இருக்கும் தே.மு.தி.க.வையும் தங்கள் பேரணியில் இணைத்துக் கொண்டதுதான் வேடிக்கை.’’ என்றார். அடுத்து நம்மிடம் பேச வந்தார் இன்னொரு ஊழியர். அவர் இந்த பிரச்னையில் பின்னணியாக இருக்கும் ஓட்டு அரசியல் குறித்து அப்பட்டமாக போட்டு உடைத்தார்.        
                           ‘‘மறுசீரமைப்பில் நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. புதிதாக நெய்வேலி தொகுதி உருவாகியுள்ளது. இந்தத் தொகுதியை குறிவைத்து அரசியல் வி.ஐ.பி.க்கள் சிலர் களமிறங்கி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் சேர்ந்துதான், தற்போது ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னையை பெரிதாக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் களமிறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்...’’ என்றார்.

தொழிலாளர் போராட்டம் குறித்து கடலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் சேகர்
                        ‘கடந்த 30 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக போராடி வருகிறோம். 2008-ம் ஆண்டில் 5 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவதாகவும், சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும் என்.எல்.சி. நிர்வாகம் உடன்பட்டு கையெழுத்திட்டது. ஆனால் சொன்னபடி செய்யவில்லை. அதுக்காகத்தான் போராட்டம்...’’ என்றார்.

 ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்க செயலாளர் வெங்கடேசன், 
                               “ஒரு மாதமாக நடக்கும் போராட்டத்தை தி.மு.க. முடிவுக்கு கொண்டுவர விரும்பியது. இது தொடர்பாக சென்னையில் அக். 10-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் ரூபாய் 1040 சம்பள உயர்வுதர நிர்வாகம் சம்மதித்தது. அதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது, தி.மு.க. தொழிற்சங்கம். ஆனால் இதை யாரும் ஏற்கவில்லை. தொடர்ந்து போராட்டம் நடக்கிறது’’ என்றார்.

போராட்ட களத்தில் முன்னனியில் நிற்கும் பண்ருட்டி பா.ம.க., எம்.எல்.ஏ.வான வேல்முருகனை சந்தித்தோம்.


                             

                        “என்.எல்.சி.க்காக நிலம் கொடுத்தவர்கள் தான் 30 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களுக்காகத்தான் போராட்டமே. தற்போது கடலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம். அக். 22-ம் தேதி அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் சேர்ந்து பிரதமரை சந்தித்து மனு கொடுக்கப் போகிறோம். அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையென்றால் எங்கள் போராட்டம் தீவிரமாகும்...’’ என்றவர், ‘‘இந்தப் பிரச்னையில் தி.மு.க.வை தனிமைப்படுத்தியிருக்கிறோம்...’’ என்றும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

                       பிரச்னையை பேசி முடிக்காமல், ஏற்கனவே இருட்டுக்குள் இருக்கும் தமிழகத்தை நிரந்தரமா இருட்டுக்குள்ள தள்ளிடாதிங்க அரசியல்வாதிகளே!
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP