பேரறிஞர் அண்ணா 107வது பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் இன்று (13.09.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசே! பேரறிஞர் அண்ணா 107வது பிறந்தநாளை முன்னிட்டு
10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்க!

சிறப்பு முகாம்களை இழுத்து மூடி ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்திடுக!!



பேரறிஞர் அண்ணா அவர்களின் 107வது பிறந்தாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதியன்று கொண்டாடப்படுகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தாளை முன்னிட்டு 10 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த அனைத்து சிறை கைதிகளையும் தமிழக அரசு கருணையுடன் விடுதலை செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
சிறைச்சாலைகள் என்பது தவறு செய்தோர் தண்டனை அனுபவிக்கும் இடம் என்பதுடன் அவர்களை சீர்திருத்தும் இடமும் கூட.. இந்த அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்த கைதிகளை கருணையுள்ளத்துடன் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது இதேபோல் 10 ஆண்டுகாலம் தண்டனை அனுபவித்த சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அப்போதைய தி.மு.க. அரசு, 7 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த கைதிகளையே கூட விடுதலை செய்திருக்கிறது என்ற முன்னுதாரணத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதேபோல் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 14 ஈழத் தமிழர்களையும் செய்யாறு சிறப்பு முகாமில் உள்ள 4 ஈழத் தமிழர்களையும் மனிதாபிமானத்துடன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு தப்பி படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழகத்துக்கு அடைக்கலமாக வந்தவர்கள் ஈழத் தமிழர்கள். அவர்கள் மீது வழக்குகளைப் போட்டு சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று.
ஆகையால் இந்த சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் எனது தலைமையில் திருச்சியில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தியிருந்தோம்.
இந்த நிலையில் இன்றும் கூட திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 5 ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணை கொலை செய்துவிடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள் தொடர்ந்து இந்த சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை குறித்து தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்காமல் இருப்பது உலகத் தமிழர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகையால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தாளையொட்டி 10 ஆண்டுகாலம் சிறையில் வாடும் அனைத்து கைதிகளுடன் இந்த சிறப்பு முகாம்களளயும் இழுத்து மூடி அந்த முகாம்களில் உள்ள ஈழத் தமிழ் உறவுகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

மத்திய அரசு சுங்கக் கட்டணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்கள் இன்று (01.09.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

சுங்கக் கட்டண குறைப்பு எனும் ஏமாற்று வித்தையை அரங்கேற்றும் மத்திய அரசுக்கு கண்டனம்!!

சுங்கக் கட்டணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடுக!

சுங்க சாவடிகளில் கட்டணம் தர மறுக்கும் "ஒத்துழையாமை" போராட்டம் நடத்தப்படும்!
நாடு முழுவதும் 60 சுங்க சாவடிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் 2.5 விழுக்காடு சுங்கக் கட்டணத்தை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றுகிற நடவடிக்கை.
சுங்க சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணத்தை மிக மிகக் கடுமையாக உயர்த்துவதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. ஒரு அரசு என்பது மக்களுக்கு செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகளில் சாலை வசதியும் ஒன்று.
ஆனால் இந்த அடிப்படை வசதியை மக்கள் பயன்படுத்துவதற்கும் கூட சுங்கக் கட்டணம் என்கிற பகல் கொள்ளை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 44 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 26 சுங்க சாவடிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும், 18 சுங்க சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இருப்பினும் கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தனியார் நிறுவனங்கள் கொழுத்த லாபம் பார்க்கும் வகையில் நடுத்தர, ஏழை மக்களின் பணத்தை சுரண்டுகிற வகையில் தொடர்ந்து 15 சதவீத அளவில் சுங்கக் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சுங்கக் கட்டணத்தை வசூலிப்பதே அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு.. அப்படியான எந்த ஒரு வசதியையும் செய்துதராமலேயே கட்டணம் எனும் பகல் கொள்ளையை அரங்கேற்றுவதில்தான் வழிப்பறி செய்வதில்தான் தனியார் நிறுவனங்கள் குறியாக இருந்து வருகின்றன. மத்திய அரசும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றுகிற மாபெரும் முற்றுகைப் போராட்டங்களை 2 முறை நடத்தியிருக்கிறது. தற்போது திடீரென சுங்கக் கட்டணத்தை வெறும் 2.5 விழுக்காடு குறைக்கிறோம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சுங்கக் கட்டண உயர்வு என்பது 15 விழுக்காடுக்கும் அதிகமாம்.. குறைப்பது என்கிற போது மட்டும் வெறும் 2.5 விழுக்காடா?
பொருளாதாரக் குறியீட்டு எண்படி இந்த சுங்கக் கட்டணத்தை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உண்மையில் பொருளாதார குறியீட்டு எண்ணின்படி 7.5 விழுக்காடு கட்டணத்தைத்தான் மத்திய அரசு குறைத்திருக்க வேண்டும். அதுவும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இந்தக் கட்டணக் குறைப்பை அமல்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்யாமல் வெறும் 60 சுங்கச் சாவடிகளில் 2.5% சுங்கக் கட்டணம் குறைப்பு என்பது ஏமாற்று வித்தைதானே தவிர வேறு எதுவும் இல்லை என வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆகையால் மத்திய அரசு ஒட்டுமொத்தமாக அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சுங்கக் கட்டணத்தை முழுமையாக குறைத்து விரைவில் சுங்கக் கட்டண முறையையே ஒழிக்க வேண்டும்; அத்துடன் இதுவரை வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் எவ்வளவு? அந்த கட்டணத்தில் இருந்து சாலையை பயன்படுத்துகிற மக்களுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்னென்ன? இன்னும் எத்தனை ஆண்டுகாலத்துக்கு இந்த சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்? என்ற விவரங்களை அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.



மத்திய அரசு சுங்கக் கட்டணத்தை முழுமையாக குறைத்து, சுங்கக் கட்டண வசூல் தொடர்பான முழுமையான வெள்ளை அறிக்கையை வெளியிடாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் "சுங்கக் கட்டணத்தை செலுத்த மாட்டோம்" என்ற ஒத்துழையாமை இயக்கத்தை பொதுமக்களை ஒன்றுதிரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP