பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த இலங்கை தலைவர்களிடம் வலியுறுத்த வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

திங்கள், 23 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (22.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இலங்கை பயணம்!

தமிழக மீனவர்- ஈழத் தமிழர் பிரச்சனையில் சிறுதுரும்பையாவது அசைக்கட்டும்!!

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. அதுவும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் மூலமாக ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள ராணுவம் இன்னமும் தமிழீழப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்படவில்லை; பல்லாயிரம் தமிழீழ அரசியல் கைதிகளின் நிலைமை என்னவானது எனத் தெரியவில்லை: வாழ்வாதாரமற்று வறுமையில் வாடும் தமிழர்களின் எதிர்காலத்துக்கு என்ன பதில் என்பதற்கு விடையில்லை?

இத்தனைக்கும் மேலாக ஒன்றரை லட்சம் தமிழரை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் சிங்கள மண்ணில் சுதந்திரமாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பெருந்துயரம்...

மாற்றத்தை உருவாக்கிடுவோம் என்ற வாக்குறுதியோடு இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி; ஆனால் தமிழக மீனவர் பிரச்சனையிலோ தமிழீழத் தமிழர் பிரச்சனையிலோ எந்த ஒரு சிறுதுரும்பையும் இந்த 9 மாத ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி அரசு அசைத்துப் போட்டது இல்லை...

தமிழக மீனவர்கள் நாளாந்தம் தாக்கப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக இருக்கிறது: ஈழத் தமிழர் பிரச்சனையிலோ இற்றுப் போன 13வது அரசியல் சாசன திருத்தத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதோடு தமிழ்நாட்டில் அடைக்கலமாகியுள்ள ஈழ ஏதிலியரை கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப சிங்களத்தோடு கூட்டுச் சதி செய்து கொண்டிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைப் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஒத்திவைப் போட வைக்க சிங்களத்தோடு கை கோர்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இவை அனைத்துமே தமிழகம் மற்றும் தமிழீழ மக்களிடத்தில் சொல்லொண்ணா வேதனையையும் துயரத்தையும் ஆறாத வடுவையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியின் இலங்கை பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் தமிழீழத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவது இயல்பானதானதுதான்.. ஆனாலும் இதுவரை மோடி அரசின் செயல்பாடுகளால் பெருநம்பிக்கை எதுவும் இல்லாத சூழ்நிலையிலும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக செல்கிற இந்திய பிரதமர் என்பதால் தமிழீழப் பகுதிகளை நிச்சயம் நேரில் பார்வையிட்டு நிலைமையை உணரவேண்டும்.

எப்படியெல்லாம் சிங்கள ராணுவக் கொட்டடியில் தமிழ் மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை நேரில் பார்க்க வேண்டும்; தமிழீழத்தின் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான வடமாகாண சபை முதல்வர் உள்ளிட்டோரை அழைத்து சந்தித்து அங்கு நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் குறித்து கேட்டறிந்து கள யதார்த்தத்தை உணர வேண்டும்; சிங்கள ராணுவத்தின் கெடுபிடிகளுக்கும் ஆக்கிரமிப்புக்கும் மத்தியில் கல்வி கற்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களையும் பிரதமர் மோடி அழைத்து சந்தித்து நிலைமைகளைக் கேட்க வேண்டும்.

சிங்கள அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடனான சந்திப்பின் போது ராணுவத்தை விலக்க வேண்டும்; அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்;

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தியாக வேண்டும் என்று இலங்கை தலைவர்களிடம் உறுதிபட வலியுறுத்த வேண்டும்; இத்தகைய கோரிக்கைகளில் ஒன்றையாவது அதாவது ஒரு சிறு துரும்பையாவது பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தின் போது அசைத்துவிட்டு வரவேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.

இலங்கை செல்லும் பிரதமர் மோடி அவர்களிடம் இந்த கோரிக்கைகளை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

சனி, 21 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (21.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்குக!
 
வழக்கறிஞர்களின் சமூக நீதிப் போராட்டம் வெல்லட்டும்!!
 
தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தை முன்வைத்து வழக்கறிஞர்கள் நடத்துகிற 'சமூக நீதி'க்கான போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 18 நீதிபதி இடங்கள் காலியாக இருக்கிறது. காலியாக உள்ள 18 நீதிபதிகளை நியமிப்பது என்பது ஒரே நேரத்திலும் அனைத்து ஜாதி, மத, பாலின பிரிவினருக்குமானதாகவும் குறிப்பாக இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை கொடுத்து நிரப்பப்படுவதுமாக இருப்பதுதான் ஜனநாயகத் தன்மை கொண்டதும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதுமாகும்.

இதுதான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் முதன்மையான நியாயமான நீதியுமான எதிர்பார்ப்பும் கோரிக்கையுமாகும். இது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் கேட்ட போது, ஏற்கெனவே 9 நீதிபதிகள் பட்டியலை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் எஞ்சிய 9 பேரை நீங்கள் சொல்கிற அடிப்படையில் நியமிக்கிறேன் என்றும் கூறியிருப்பது இந்த மண்ணின் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத மேலாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகும்.

நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறவர்கள் யார்? எந்த சமூகத்தினருக்கு முன்னுரிமை என்பதை அறியமுடியாத வெளிப்படைத்தன்மையற்ற முறைதான் இதற்கு காரணம்.. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிகக் குறைந்த விழுக்காட்டினரே இருக்கக் கூடிய ஒரு சமூகமே பெரும்பான்மை இடங்களை அபகரித்துக் கொள்கிற 'கபளீகரம்' செய்து கொள்கிற "நூற்றாண்டுகால போக்கு" இப்போதும் நீடிக்கிறது..

சமூக நீதியின் தாய் மண்ணாகிய தமிழ்நாடு இதை பொறுத்துக் கொண்டிருக்காது என்பதை வெளிப்படுத்துவதுதான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்.. இந்த நீதித்துறையில் சமூக நீதிக்கான போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிப்பதுடன் வழக்கறிஞர் சமூகத்துக்கு பக்க பலமாக என்றென்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கறிஞர்களின் முதன்மை கோரிக்கைகளான, நீதிபதிகள் பதவிகளுக்கான பரிந்துரை அனைத்தையும் ஒரே பட்டியலாக அனுப்ப வேண்டும்; இதுவரை பிரதிநிதித்துவப்படாத சாதியினருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்; காலி பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண் வழக்கறிஞர்களுக்கு ஒதுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு பிறமாநிலத்தைச் சேர்ந்தோரை பரிசீலிக்கக் கூடாது; மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றவும் வென்றெடுக்கவும் ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகத்தினரும் பிரிவினரும் ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைந்து சமூக நீதிக்கான போராளிகளாகப் போராடுவோம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என வட மாகாணசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றம் - இந்திய மத்திய அரசு சர்வதேச விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 12 பிப்ரவரி, 2015

இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே ! வட மாகாணசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம்! இந்திய மத்திய அரசே! சர்வதேச விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் அவர்கள் இன்று (12.02.2015) வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்றது "இனப்படுகொலை"யே என்பதை பிரகடனப்படுத்துகிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமத்தை தமிழீழத்தின் வடக்கு மாகாணசபை செவ்வாய்க்கிழமையன்று ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

இந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது. அதுவும் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தில் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை விரிவாக விவரிக்கப்பட்டும் இருக்கிறது.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் கைவிடப்படும் நிலை உள்ளதாகவும் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரவன் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

8 கோடித் தமிழர் வாழும் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இதேபோல் 2013ஆம் ஆண்டே "இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது ஈழத் தமிழரின் தமிழீழத் தாயகப் பிரதேசங்களில் ஒன்றாக வடக்கு மாகாண சபையும் இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை; ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இனப்படுகொலை தொடர்பான விசாரணையை நடத்த சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழத் தமிழரின் வரலாற்றுத் துயரம் தோய்ந்த நீதிகோரும் இந்தப் பிரகடனத்தை இந்திய மத்திய அரசு உதாசீனப்படுத்தக் கூடாது.

தமிழ்நாட்டு சட்டமன்றமும், தமிழீழத்தின் வடக்கு மாகாண சபையும் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை இனியேனும் இந்திய மத்திய அரசு ஏற்று "சிங்களத்தின்" சதிவலையில் சிக்காது தமிழினத்துக்கான நீதி கிடைக்க சர்வதேச விசாரணைக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் கட்டமாக சிங்கள பேரினவாத அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவை உடனடியாக இந்தியாவுக்குள் அனுமதி அளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP