சேலத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் இரங்கல்

திங்கள், 22 ஜூலை, 2013

சேலத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
சேலத்தில் பாரதிய ஜனதா கட்சி பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தமிழக அரசுக்கு விடப்பட்டுள்ள சவாலாகும். இந்த கொலை எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்ட பஞ்சாயத்தோ, வன்முறை அரசியலோ செய்யாமல், அமைதி வழியில் அரசியல் நடத்திய அகிம்சைவாதிக்கு தான் தண்டனையா? ஒரு நல்ல அரசியல்வாதிக்கு நடந்திருக்கும் இந்த நிகழ்வை தமிழக மக்கள் மட்டும் அல்லாமல் இந்திய மக்களும் மன்னிக்க மாட்டார்கள். எந்த காரணத்திற்காக இந்த கொலை நடந்திருந்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றமாக கருதி குற்றம் செய்தவர்களையும், குற்றம் செய்ய துண்டியவர்களுக்கும் தமிழக அரசு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

அவருடைய மறைவால் வாடும் அவரது மனைவி சுபா, மகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி ஆகஸ்ட் 5-ம் தேதி அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 20 ஜூலை, 2013

 கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை 19/07/2013 அன்று  நடைபெற்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் த.செ.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 700 நாட்களாக அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களின் நியாயமான உணர்வுகளை புறந்தள்ளியும் தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிராகரித்தும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு (unit) ஒன்றை இயக்கத் தொடங்கியிருப்பதாக வந்துள்ள அறிவிப்பு, கடும் கண்டனத்திற்குரியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 15 நிபந்தனைகளை நிறைவேற்றாமல், உச்சநீதிமன்றத்தை ஏமாற்றும் வகையிலான ஒரு அறிக்கையை நீதிபதிகளிடம் தருவதற்கு பதில், நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக யாருக்கும் தெரியாமல் அணுக்கரு பிளவுக்கான முதல் படிமத்துக்கான உத்தரவை (First Approach to Criticality) பிறப்பிக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு இருப்பது பல நியாயமான சந்தேகங்களை கிளப்புகிறது.

கூடங்குளம் அணுஉலை வழக்கில் உச்ச நீதிமன்றம் மே மாதம் 6 ஆம் தேதி தந்த தீர்ப்பில், “அணுஉலையில் 15 நிபந்தனைகளைச் செயல்படுத்த வேண்டும்; அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், அதன்பிறகே அணு உலையை தொடங்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறியது. அதன்படி இந்திய அணுமின் கழகம், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தங்கள் அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நிபந்தனையின்படி, அறப்போராட்டக்காரர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை போட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும் இல்லை. தவிர அணுவுலை அமையவிருக்கும் பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் சுற்றுவட்டார மக்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படை விதியை தமிழக அரசும், நெல்லை மாவட்ட பொறுப்பு அரசு ஊழியர்களும் இதுவரை கடைபிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணுஉலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணு உலையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு உதிரிப் பாகத்தின் தரத்தையும் பாதுகாப்பு அம்சங்களையும் மறு ஆய்வு செய்து உறுதிப்படுத்தி அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

கூடங்குளம் அணுஉலையில் பல இலட்சக் கணக்கான உதிரி பாகங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.; ஒவ்வொன்றையும் சோதனை செய்து தரத்தை உறுதிப்படுத்த பல மாதங்கள், ஏன் வருடக்கணக்கில் ஆகும். ஆனால், இரண்டு மாதத்துக்குள்ளாக அணுஉலையை இயக்கப் போகிறோம் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் ஒரு செயலே.

 நாட்டின் அனைத்துத் துறைகளையும் பற்றிப் படர்ந்திருக்கும் ஊழல் பூதம், அணுவுலையையும் விட்டு வைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் கூடங்குளம் அணுவுலைத் திட்டத்தின் ஊழல் முறைகேடுகளை சரிசெய்யாமல் அணுவுலையை இயக்கத் தொடங்கியுள்ளதாக சொல்கின்றார்கள்.

• ரஷியாவைச் சேர்ந்த அணுவுலை பாகங்கள் விற்கும் நிறுவனமான ஜியோ பொடோல்ஸ்க் (Zio Podolsk) - ன் இயக்குனர் செர்கை சுடேவ். இலாபத்தை அதிகரிப்பதற்காக தரமற்ற இரும்பை வாங்கி, அதனைக் கொண்டு அணுவுலை பாகங்களை தயாரித்து, மிகப் பெரிய ஊழல் செய்ததற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜியோ பொடோல்ஸ்க்-ன் தாய் நிறுவனமான ரோசாட்டம் (Rosatom)-ன் தலைவர் டெனிஸ் கோச்ரேவும் இந்த ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார்.

•  போலியான தரமற்ற பாகங்களை அணுவுலைகளுக்கு விற்பனை செய்த மற்றொரு ரஷிய நிறுவனமான இன்ஃபோர்ம்டெக் (INFORMTEK)-ன் தலைவர் அலெக்சாண்டர் முரேச்சும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் அணுவுலை பாகங்கள் விற்பனை செய்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மற்ற நாடுகளில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அரசும், இந்திய அணுசக்திக் கழகமும் இதை அப்பட்டமாக மூடி மறைத்து மக்கள் உயிரோடு விளையாடுகின்றன. போராட்டக்காரர்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகே கூடங்குளம் அணுவுலைகான பாகங்களை ஊழல் நிறுவனங்களான ஜியோ பொடோல்ஸ்க், இன்ஃபோர்ம்டெக்கிடம் இருந்து வாங்கியதாக அணுசக்திக் கழகம் ஒப்புக் கொண்டுள்ளது!

மேலும், கூடங்குளம் அணுவுலைகள் 1 & 2 - ல் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற கருவிகள் மற்றும் உதிரிபாகங்களால் தவறான பொருத்தமற்ற சமிஞ்கைகள் வருவதாகவும், இவை அணுவுலை இயக்கத்தில் மிகப் பெரிய சிக்கல்களையும், பெரும் விபத்துகளையும் தோற்றுவிக்கும் என்று இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் (Atomic Energy Regulatory Board -AERB) முன்னாள் தலைவர் டாக்டர்.ஏ.கோபாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தரமற்ற பாகங்களால் மிகப்பெரிய விபத்து காத்திருக்கிறது என்றும், கூடங்குளம் அணுவுலையின் பாதுகாப்பின்மை குறித்தும் இந்தியாவின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் 60 விஞ்ஞானிகள் தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்களுக்கு அச்சம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். அணுவுலை பாகங்களை வினியோகம் செய்த ஊழல் நிறுவனங்களின் தரமற்ற பாகங்கள் கூடங்குளம் அணுவுலைகளில் பொருத்தப்பட்டுள்ளதை கடுமையாக ஆட்சேபிக்கும் அவர்கள் அனைவரும் அணுசக்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் அனைவரும் போராடும் மக்களின் நியாயமான கேள்விகளுக்கு ஆதரவானவர்கள்.

இவை தவிர, சுனாமியால் வரும் ஆபத்து, கூடங்குளம் பகுதிக்கு அருகிலேயே கடலுக்கடியில் எரிமலை இருப்பது, அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியில் அணுவுலைகளைக் கட்டக் கூடாது என்னும் விதியை மீறி சுண்ணாம்புப் பாறைகள் நிரம்பிய, அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் நெல்லை மாவட்டத்துக்குள் இருக்கும் கூடங்குளத்தில் அணுவுலை கட்டியிருப்பது, அணுக்கழிவுகளை என்னப் செய்யப் போகிறார்கள் என்று அரசுக்கே தெரியாமல் இருப்பது என்று நீண்டு கொண்டே போகும் மக்களின் கேள்விகள் எதற்குமே யாரும் பதில் தரவில்லை.

கூடங்குளம் அணு உலைகளைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு தோராயமாக 650 கோடி லிட்டர் தண்ணீரை கடலிலிருந்து எடுத்து அணு உலையில் குளிர்விப்பதற்கு பயன்படுத்திய பிறகு அந்த நீர், அதிக வெப்பத்துடனும் கதிர்வீச்சுத்தன்மையுடனும் மீண்டும் கடலில் கொட்டபடும். இது அந்தப் பகுதி மக்களையும் அவர்களது வாழ்வாதரத்தையும் கடுமையாக பாதிக்கும். இதனாலேயே சுற்றுசூழல் ஆலோசனைக் கமிட்டி கடலுக்கடியில் பைப் மூலமாக இரண்டு கி.மீ உள்ளே சென்று நீரை கலக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இவ்வளவு கொள்ளளவு தண்ணீரை அதிக வெப்பத்துடன், கதிர்வீச்சுடன் கடலில் கலப்பது எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது வெட்டவெளிச்சம். கடற்கரையிலேயே அதை கொட்டுவது மேலதிக பாதிப்பையே ஏற்படுத்தும்.

இத்தனை பாதுகாப்பின்மை நிரம்பிய கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் கிராம மக்கள் மீதும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்கள் மீதும் 2,27,000 வழக்குகளைப் போட்டுள்ளது தமிழக அரசு. இந்திய வரலாற்றிலேயே ஒரே ஒரு காவல் நிலையத்தில் இவ்வளவு வழக்குகள் பதியப்படுவது இது தான் முதல் முறை. அதுமட்டுமின்றி போராடும் மக்கள் மீதான அனைத்து வழக்குகளையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியும் கூட இன்னும் ஒரு வழக்கு கூடத் திரும்பப் பெறப்படவில்லை.

எப்படி செர்னோபில்லில் பேரழிவு ஏற்பட்ட பிறகு இந்தியா இரசியாவுடன் அணு உலை ஒப்பந்தம் செய்து கொண்டதோ, அது போல இன்று புகுசிமாவில் பேரழிவில் அந்த அணு உலையில் ஏற்பட்ட இடர்பாடுகள் கூட இன்னும் சரிசெய்யப்படாத நிலையில் சப்பான் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் சப்பானுடன் பல அணு உலை ஒப்பந்தங்களை செய்து வந்துள்ளார். ஆனால் சப்பான் அரசோ தங்களிடம் உள்ள அணு உலைகளை 2030ற்குள் மூழுவதுமாக மூடிவிடுவாதாகவும், அணு மின்சாரத்திற்கு பதிலாக காற்றாலை போன்ற மரபு சாரா எரிசக்திக்கு மாறுவதாகவும் கூறியிருக்கின்றனர். அணு உலை எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிப்பதை அது காட்டுகின்றது, ஆனால் இங்கு பிரதமர் முதல் கடைக்கோடி அரசு ஊழியர் வரை போராடும் மக்களின் மேல் பொய்யான அவதூறுகளை வைப்பது மட்டுமே இங்கு பார்க்க முடிகின்றது. அப்படி அணு உலை பாதுகாப்பானது தான் என்றால் சப்பான் அரசு ஏன் தன் நாட்டில் அனு உலைகளை மூடிவிட்டு நமக்கு விற்கிறது?. சப்பானிடம் இல்லாத தொழில் நுட்பமா இந்தியாவிடம் உள்ளது ?

ஏகாதிபத்தியங்களின் நலன்களைக் காக்கவும், அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளுடன் போடப்பட்டுள்ள ஆறு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அணுவுலை வர்த்தகத்தில் கிடைக்கப்போகும் தரகு (Commission) பணத்தைச் சுருட்டுவதற்காக கூடங்குளம் மக்களின் 700 நாட்களைக் கடந்த மகத்தான மக்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்துகின்றது இந்திய அரசு. கூடங்குளம் மக்களின் போராட்டத்தால் அணுவுலை மூடப்பட்டால், இந்தியாவில் எங்குமே இனி அணுவுலையை திறக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட இந்திய அரசு ஒட்டுமொத்த இந்திய மக்களையும் முட்டாளாக்கி கூடங்குளம் அணு உலையை இயக்கத் துடிக்கின்றது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒட்டுமொத்தமாகக் கொன்றழித்துவிடும் அணு உலை ஊழல் பற்றி கூட வாய் திறக்க மறுக்கும் இந்திய அரசின் அயோக்கியத்தனத்தையும், அதற்குத் துணை நிற்கும் விதமாக போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசையும் தமிழக மக்கள் எக்காலத்திலும் மன்னிக்கவே மாட்டார்கள். அணு உலையை எதிர்த்துப் போராடும் மக்கள் ஒய்ந்து விடப்போவதில்லை...!

 தமிழக மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் துச்சமென மதித்து, தமிழர்களின் போராட்டத்தை காலில் போட்டு மிதித்து, கூடங்குளம் அணுவுலையை இயக்கத் தொடங்கியிருக்கும் இந்திய அரசின் செயல் தமிழினத்திற்கு விடப்பட்ட நேரடியான சவால் !

1945 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் ஜப்பானின் ஹிரோஷிமா மீதும் அதனை தொடர்ந்து நாகசாகி மீது அணு குண்டு வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்தது அமெரிக்கா. அணு குண்டினால் ஏற்பட்ட பேரழிவைக் கண்டதால் அந்த நாள் உலகெங்கும் உள்ள மனித நேயமிக்கவர்களால் அணு சக்தி எதிர்ப்பு நாளாக பாவிக்கப்பட்டு வருகின்றது. அத்தகைய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நாளை மனதில்கொண்டு, அணுவுலையை இயக்கத் தொடங்கியிருக்கும் இந்திய அரசையும், துணை போகும் தமிழக அரசையும் வன்மையாகக் கண்டித்து கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகத்து 5 திங்கட்கிழமையன்று சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன் மக்கள் திரள் போராட்டம் நடத்த இருக்கின்றது.

இந்திய , தமிழக அரசுகளே!

• உச்சநீதி மன்ற ஆணையின்படி போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பபெறு!
• உரிய பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றாமல் அணு உலையை இயக்கத் தொடங்காதே!
• வெப்பமும் அணுக்கதிர்வீச்ச்ம் கலந்த நீரைக் கடலில் கலந்து கடல் வளங்களை அழிக்காதே!
• கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

நாம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். இடிந்தகரையில் நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களோடு கரம் கோர்த்து அணு உலைக்கு எதிரானப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்று கடமை நமக்கு இருக்கின்றது என்பதை உணர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அணு உலை எதிர்ப்பாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றோம். இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் விதமாக, சென்னை, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்படும்..

***

வைகோ,பொதுச் செயலாளர், ம.தி.மு.க

தா.செ. மணி, ஒருங்கிணைப்பாளர், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

பண்ருட்டி தி. வேல்முருகன், நிறுவனர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி 

ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர், மனித நேய மக்கள் கட்சி

கோவை கு.இராமகிருட்டிணன், பொதுச் செயலாளர், த.பெ.தி.க

மீ.த.பாண்டியன், பொதுச் செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ),மக்கள் விடுதலை

தெஹலான் பாகவி, தலைவர், SDPI
 
பொறியாளர்ஆர்.சுந்தர்ராஜன், பூவலகின் நண்பர்கள்

அருண்சோரி, செய்தித் தொடர்பாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி

செந்தில், சேவ் தமிழ்ஸ் இயக்கம்



Read more...

என்.எல்.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை முடிவை தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை தீவிரப்படுத்தும்: பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

புதன், 10 ஜூலை, 2013

என்.எல்.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை முடிவை தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை தீவிரப்படுத்தும்: பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

கண்டன ஆர்ப்பாட்டம்:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதை கண்டித்தும், உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்யக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வட்டம் 19–ல் உள்ள தபால் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை  09/07/2013 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, நகர செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் கண்ணன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் திருமால்வளவன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, சின்னதுரை, முடிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.ஆர்ப்பாட்டத்தில் கடலூர் நகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், கேசவபெருமாள், தொழிலாளர் வாழ்வுரிமை சங்க நிர்வாகிகள் வேல்முருகன், வடிவுசிகாமணி, ஞானவேல், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சண்முகம் உட்ட பலர் கலந்து கொண்டார். முடிவில் இளங்கோவன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் கலந்து கொண்டு பேசியது:

ஒப்பந்த தொழிலாளர்கள் பாதிப்பு:


மத்திய அரசு கடந்த 17 ஆண்டுகளில் 16 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ளது. அதில் என்.எல்.சி. நிறுவனத்தின் ஒரு அங்கமாக இயங்கி வந்த உரத்தொழிற்சாலையை மூடிவிட்டது. என்.எல்.சி. நிறுவனம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுமே என்பதற்காகத்தான் தமிழக வாழ்வுரிமை கட்சி களத்தில் நிற்கிறது. என்.எல்.சி. தொழிலாளர்கள் ஒரே குடையின் கீழ் வாருங்கள் நாம் சேர்ந்து போராடுவோம். ஒரு பிரச்சினையை கையில் எடுத்தால், அதில் வெற்றி பெறும் வரை உறுதியாக நிற்க வேண்டும். இது தான் தொழிலாளர் வர்க்கம்.

போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்:


2006–ல் மத்திய அரசு இதுபோன்ற முடிவை எடுத்த போது, நானும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் போராடி தடுத்து நிறுத்தினோம். அதேபோல் இப்போதும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை முடிவை தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை தீவிரப்படுத்தும். மத்திய அரசு தொடர்ந்து மெத்தனபோக்கை கடைபிடித்தால், அடுத்தக்கட்டமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை திரட்டி என்.எல்.சி. நிறுவனத்தை ஸ்தம்பிக்க செய்வேன். என்.எல்.சி.யில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இவர்களது பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை என்.எல்.சி. நிறுவனம் அமுல்படுத்த வேண்டி, அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அடுத்த வாரம் முற்றுகையிட உள்ளது. மேலும் தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை ராணுவத்தினர் தாக்கி வருவதை கண்டித்து கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Read more...

என்.எல்.சியின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்வதைக் கண்டித்து பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 9 ஜூலை, 2013

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்வதைக் கண்டித்தும், நீதிமன்ற உத்தரவுபடி ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நெய்வேலி வட்டம் 19–ல் உள்ள தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 09/07/2013 காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்றினார்.




























Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP