கடலூர் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க தி.வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 28 செப்டம்பர், 2012









கடலூர்:


கடலூர் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

           கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கரமாக சுழன்றடித்த சூறாவளியாலும் கனமழையாலும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் அடியோடு வீழ்ந்து நாசமாகிப் போய்விட்டன. சுனாமியாலும் அடுத்து வந்த தானே புயலாலும் பேரழிவை சந்தித்த கடலூர் மாவட்டத்தின் பலா, முந்திரி, மா, வாழை, தென்னை விவசாயிகள் தங்களது எதிர்காலமே இருண்டுபோன நிலையில் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டிருந்தது.

                 இந்நிலையில் வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் அடகு வைத்தும் அதிக வட்டிக்குப் பணம் திரட்டியும் வாழை சாகுபடியில் ஈடுபட்டு எதிர்காலத்தை மீட்டெடுக்கலாம் என காத்திருந்தனர். 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ1.5 லட்சம் செலவிட்டு சாகுபடி செய்த வாழை மரங்கள் அடுத்த 15 அல்லது 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்தன. ஆனால் பெரும் சூறாவளியில் குலைதள்ளிய வாழைகள் ஒரு ரூபாய்க்குக் கூட பயனில்லாமல் அடியோடு நாசமாகிப் போய் விவசாயிகளின் தலையில் பேரிடி விழுந்திருக்கிறது. இனியும் அழிவுகளைத் தாங்காது தற்கொலை செய்து கொள்ளும் நிலையில்தான் கடலூர் மாவட்ட விவசாயிகள் உள்ளனர். எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு சற்றேனும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ50 ஆயிரமாவது உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

               சூறாவளி சரித்துப் போட்ட வாழைகளை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் வாழை சாகுபடியை மீண்டும் தொடங்கவும் வேளாண் துறை மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வேண்டுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பார்வையிட்டு அவற்றைப் பாதுகாக்கவும் உரிய நிவாரணம் வழங்கவும் வேளாண்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை உடனே அனுப்பி வைக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து தீக்குளித்து இறந்த விஜயராஜ் உடலுக்கு பண்ருட்டி தி.வேல்முருகன் மலர் மாலை வைத்து அஞ்சலி

வியாழன், 20 செப்டம்பர், 2012

சேலம்:

     ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து   சேலத்தில் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் தீக்குளித்து இறந்தார். நேற்று 19/09/2012 விஜயராஜ்  உடலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளுடன்  மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.


முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அளித்த பேட்டி:


     ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியாவிற்கு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி தம்பி விஜயராஜ் தீக்குளித்து இறந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.  முத்துக்குமார், செங்கொடி உள்பட பலர் உயிர்தியாகம் செய்துள்ளனர். இதனால் மத்திய அரசு ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். மத்திய அரசு இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். ராஜபக்சே இந்தியாவிற்கு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நாளை ( இன்று 20/09/2012 ) ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.

          சென்னையில் 21-ம்தேதி நடக்கும் ரெயில் மறியலில் நான் கலந்து கொள்கிறேன். இந்த மறியலில் திரளானோர் கலந்து கொள்கிறார்கள். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். இதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

            பேட்டியின் போது மாநில தலைவர் தீரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வை.காவேரி, காமராஜ், மாநில துணை பொது செயலாளர் சக்திவேலன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Read more...

மகிந்த ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தீக்குளித்த தோழர் சேலம் விஜய்ராஜ்க்கு மறைவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012





      


    மகிந்த ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தீக்குளித்த தோழர் சேலம் விஜய்ராஜ்க்கு மறைவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தி


    சிங்கள இனவெறியன் போர்க்குற்றவாளியான கொலைகாரன் மகிந்த ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தீக்குளித்த தோழர் சேலம் விஜய்ராஜ் இன்று நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தி சொல்லொண்ணா துயரில் ஆழ்த்துகிறது. தோழர் விஜய்ராஜ்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வீரவணக்கத்தை செலுத்துகிறது! தமிழீழத்தின் மீதான இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்த ஈகச்சுடர் முத்துக்குமார் உட்பட 17 இளைஞர்கள் தீக்குளித்து மாண்டுபோயினர். அப்பொழுதும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மூன்று தமிழர் விடுதலைக்காக தோழர் செங்கொடி தன்னுயிரை தீக்கு தாரை வார்த்தபோதும் வல்லாதிக்க இந்தியப் பேராரசு வாய்மூடி மவுனியாகத்தான் இருந்தது. இப்பொழுது கொலைகார சிங்கள ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தோழர் சேலம் விஜய்ராஜ் தமது உயிரை தீ நாக்குகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறார்.

            இந்தியப் பேரரசே! தமி்ழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை தமது உயிரைக் கொடுத்து வெளிப்படுத்தியிருக்கிறார் எங்கள் தோழர் சேலம் விஜய்ராஜ்! இப்போதாவது எங்கள் உணர்வுகள் உங்களுக்குப் புரிகிறதா? கொலைகாரன் ராஜபக்சேவின் இந்திய வருகையை உடனே தடை செய்க! அன்று முத்துக்குமார் பற்ற வைத்த பெருநெருப்பு இன்று சேலம் விஜய்ராஜ் வரை நீண்டு கொண்டிருக்கிறது.. இப்படி காலங்காலமாக தமிழ் இளைஞர்கள் தங்களுக்குத்தானே தீக்குளித்துக் கொண்டிருப்பார்கள் என்று மட்டும் கனவு காணாதீர்கள்! மத்திய அரசே! ராஜபக்சேவின் இந்திய வருகையை தடை செய்! இல்லையெனில் இந்தத் தோழர்கள் பற்ற வைத்திருக்கும் நெருப்பு சுவாலை உங்கள் இந்திய வல்லாதிக்கத்தை சுட்டுப் பொசுக்கிவிடும் என்று எச்சரிக்கிறோம்!



Read more...

தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினர் இலங்கை செல்ல தடை விதிக்க பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

திங்கள், 17 செப்டம்பர், 2012



தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினர் இலங்கை செல்ல தடை விதிக்க பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை


     இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை தமிழீழத் தாயகத்தில் கொன்று குவித்த இலங்கை நாட்டுடன் தொழில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்காக செப்டம்பர்  20-ந் தேதியன்று மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினர் இலங்கை செல்வதாக வெளியாகி உள்ள செய்தி கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

       இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்களின் வேண்டுகோள். இதை ஏற்று தமிழக அரசும் தமிழக சட்டப்பேரவையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இந்திய மத்திய அரசோ எப்பொழுதும் போல் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி இலங்கையுடன் தொழில் வர்த்தக உறவுகளை விரிவாக்கம் செய்து வருவது தமிழர் நெஞ்சங்களில் எரிமலையால் வெடித்துக் கொண்டிருக்கிறது.

           இந்த சூழ்நிலையில் தமிழக தொழில் வர்த்த சங்கத்தின் 45 பேர் கொண்ட குழு, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை செல்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழக மக்களின், தமிழக அரசின் உணர்வுகளை உதாசீனப்படுத்திவிட்டு தமிழக தொழில் வர்த்த்தக சங்கத்தினர் இலங்கை செல்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த பயணமானது தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தை அவமதிக்கும் செயல் என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

             தமிழக தொழில் வர்த்தக சங்கத்தின் இந்த இலங்கை பயணத்துக்கு தமிழக அரசு உடனே தடை விதித்து எச்சரிக்கை விடுக்குமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. தமிழர்களின் உணர்வுகளைப் புறந்த்தள்ளிவிட்டு இலங்கை செல்வார்களேயானால் தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினர் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறேன்.

Read more...

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும்" Innocence of Muslims" திரைப்படத்திற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்






நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும்  "Innocence of Muslims" திரைப்படத்திற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை


இஸ்லாமிய சகோதரர்களின் நீதியான போராட்டத்துக்கு ஆதரவு

             "Innocense of Muslims" எனும் பெயரில் ஆலன் ராபர்ட் என்பவர் இயக்க்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் உலகம் முழுவதும் இஸ்லாமியர்களை வெகுண்டெழ வைத்துள்ளது. இஸ்லாமியர்கள் தங்களது உயிரைவிட மேலானதாக கருதிக் கொண்டிருக்கும் இறைத் தூதரான அண்ணல் நபிகள் நாயகத்தை மிக மோசமாக சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

            இத்திரைப்படத்துக்கு எதிராக எகிப்திலும் லிபியாவிலும் தொடங்கிய எதிர்ப்புப் பேரலைகள் இப்பொழுது இந்தியாவில் தமிழகத்தையும் உலுக்கி வருகிறது. இஸ்லாமிய சகோதரர்கள் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய சகோதரர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் இந்தத் திரைப்படத்தை அமெரிக்கா அரசாங்கம் தடை செய்து சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமெரிக்க அரசாங்கம் அந்த மக்களிடத்தில் இப்படியொரு திரைப்படத்தை வெளியிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

           இந்திய அரசும் தமது வன்மையான கண்டனத்தை அமெரிக்காவிடம் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. உலகப் போராட்டமாக உருவெடுத்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்களின் இந்த நீதியான போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அண்ணல் நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரிக்கும் இந்தத் திரைப்படத்துக்கு எதிராக தங்களது பகுதிகளில் நடைபெறும் அறப் போராட்டங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகளும் தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்களது ஆதரவை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

 

Read more...

ராஜபக்சே இந்திய வருகையைக் கண்டித்து பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமயில் ரயில் மறியல் போராட்டம்

 புவனகிரி:

தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்குழு கூட்டம் புவனகிரியில் 16.09.2012 அன்று நடைபெற்றது.


கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கலந்துகொண்டு பேசுகையில்,


    இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவர் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இதை எதிர்த்து சிதம்பரத்தில் என் தலைமையில் வருகிற செப்டம்பர் 20-ந் தேதி சுமார் 1000 பேர் பங்கேற்கும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். பல்வேறு பகுதிகளிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், மாநில இளைஞர் பாசறை தலைவர் கோபிநாத், மாநில மதிப்பு குழு பாலகுருசாமி, மாவட்ட நிர்வாக குழு ராஜேந்திரன், மற்றும் வீரசோழன், சேரலாதன், அக்னி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புவனகிரி நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்



 

Read more...

சில்லரை வர்த்தகத்தில் 51% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு தி.வேல்முருகன் கண்டனம்

சனி, 15 செப்டம்பர், 2012

     



   


         சில்லரை வர்த்தகத்தில் 51% அன்னிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு  தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

         மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத மத்திய அரசாக ஏழை எளிய மக்களின் வயிற்றில் சமையலறையில் அடித்த அடியாக டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு கட்டுப்பாடு என்ற ரணகளம் இன்னமும் ஆறவில்லை.  இப்போது சில்லரை வர்த்தகத்தில் 51%அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான சிறு வர்த்தகர்களின் நெஞ்சில் இடியை இறக்கியுள்ளது.

          சில்லரை வர்த்தகத்தில் பகாசுர பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு உதட்டளவில் இதில் மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று பம்மாத்து காண்பிக்கிறது மத்திய அரசு. மக்களின் நலன் சார்ந்து முடிவெடுக்காமல் பன்னாட்டு நிதியங்களின் வலியுறுத்தல்களுக்கு ஆட்பட்டு மேற்குலக நாடுகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து இத்தகைய அனுமதியை மத்திய அரசு கொடுத்துள்ளது.

           சொந்த நாட்டு மக்களை நடுத்தெருவில் தவிக்கவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு செங்கம்பளம் விரிக்கும் மத்திய அரசின் இந்த சர்வாதிகார செயலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள பல கோடி சில்லரை வர்த்தகர்க ளின் எதிர்காலத்தை இருள்மயமாக்கியதாக மாற்றியிருக்கும் மத்திய அரசின் இந்த முடிவு உடனடியாக திரும்பப் பெறப்பட்டாக வேண்டும். ஏற்கெனவே நாடு முழுவதும் மக்களின் கோப அலைகளின் கொந்தளிப்பில் சிக்கியிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசானது இத்தகைய நடவடிக்கைகளால் வரும் தேர்தலில் வன்ம அடி வாங்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

 

Read more...

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்: பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள்

புதன், 12 செப்டம்பர், 2012

     


             

                தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என  பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு


        காவிரியில் தமிழகத்துக்கு தற்காலிகமாக 10 ஆயிரம் கன அடிநீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு கர்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக விவசாயிகள் என்ற பெயரில் கன்னட இனவெறி அமைப்புகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களை நடத்தி வருவதுடன் தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்களின் உருவபொம்மைகளையும் எரித்து வருவது தமிழக மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

             தமிழ்நாட்டுக்கு உரிய நேரத்தில் காவிரி நீரை திறந்துவிடாத காரணத்தால் ஏற்கெனவே குறுவை சாகுபடி பொய்த்துப் போய்விட்டது. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேட்டூர் அணைக்கு 95.480 டி.எம்.சி. அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருக்க வேண்டும். மத்திய நீர் ஆணையம் வகுத்துள்ள வழிமுறைகளின்படி, இடர்பாடு காலப் பங்கீட்டின்படி கணக்கிட்டாலும் கூட 43.837 டி.எம்.சி. அடி தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்து இருக்க வேண்டும். ஆனால் கர்நாடகம் கொடுத்ததோ வெறும் 9.187 டி.எம்.சி. அடி தண்ணீர் மட்டுமே! இதனால் குறுவைசாகுபடியைக் கைவிட வேண்டிய நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

          இந்நிலையில் சம்பா சாகுபடியாவது நடைபெற வேண்டுமெனில் காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட்டாக வேண்டும். தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட வேண்டிய அணைகளில் ஒன்றான கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124 அடியில் தற்போது 110 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணை எந்த நேரமும் நிரம்பிவிடும் என்று கூறப்படுகிறது. இதேபோல் கபினி அணையும் நிரம்பும் நிலையில் இருக்கிறது. கபினியில் இருந்து வினாடிக்கு 5450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீர் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்துக்கும் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் கனமழை தொடர்ந்து பெய்வதால் கபினிக்கான நீர்வரத்தும் 17 ஆயிரத்து 788 கன அடியாக இருக்கிறது. இதனால் தமிழகத்துக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுவதால் எந்த ஒரு நட்டமும் கர்நாடகத்துக்கு ஏற்படப்போவதில்லை. கர்நாடக விவசாயிகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

கர்நாடக விவசாயிகள் தேவையற்ற போராட்டத்தை கைவிடாவிட்டால் தமிழகம் எதிர்வினை ஆற்ற நேரிடும்

           ஆனால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ரக்ஷன வேதிகே மற்றும் கன்னட சாலவலி போன்ற அமைப்புகள் போராட்டங்களை தூண்டிவிடுகின்றன. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதை எதிர்த்து நடத்தும் தேவையற்ற இந்தப் போராட்டங்களால் இரு மாநில உறவுகள் சீர்குலைந்து போகும் நிலைமை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கர்நாடக விவசாயிகளின் அர்த்தமற்ற போராட்டம் தொடருமேயானால் காவிரி நீர் உரிமைக்காக போராடும் தமிழக மக்களும் தங்களது எதிர்வினையை வெளிப்படுத்த நேரிடும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கிறது.

              மேலும் வரும் 19-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற உள்ள காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிடுவதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழகத்து காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசை மத்திய அரசும் நிர்பந்திக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

 

Read more...

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது காவல்துறை தாக்குதலைக் கண்டித்து தி. வேல்முருகன் பங்கேற்ற மறியல் போராட்டம்

செவ்வாய், 11 செப்டம்பர், 2012




சென்னை:

      கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது காவல்துறை 10/09/2012 அன்று நடத்திய கொடுந்தாக்குதலைக் கண்டித்து சென்னையில் 11/09/2012 அன்று பல்வேறு அரசியல் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உள்ளிட்ட பல நூறு பேர் கைதாகினர்.

          சென்னை அண்ணா சாலையில் மறியலில் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் , மதிமுகவின் மல்லை சத்யா உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அண்ணா சாலையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன், மல்லை சத்யா உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.


Read more...

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

திங்கள், 10 செப்டம்பர், 2012







இன்று 10/09/2012 கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு  பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர்  பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள செய்திக்  குறிப்பு


           கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டுகாலமாக அமைதி வழியில் போராடி வந்த பொதுமக்கள் மீது இன்று தடியடி நடத்தி, கண்ணீர்புகை குண்டு வீசி, துப்பாக்கிச் சூட்டை காவல்துறை நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. பல நூறு பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்ட அமைதி வழிப் போராட்டத்தை இத்தகைய அடக்குமுறை மூலம் நசுக்குவது என்பது ஏற்புடைய செயல் அல்ல. காவல்துறையினரின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக கடலுக்குள் குதித்த பலரது கதியும் என்ன என்று தெரியவில்லை? அவர்கள் உயிரோடு உள்ளனரா? என்பதும் தெரியவில்லை. இதேபோல் செய்தியாளர்கள் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

               கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகாலமாக நடத்தப்பட்டு வரும் போராட்டம் நியாயமானது. அமைதிவழியில்தான் நடத்தப்பட்டும் வருகிறது. கடந்த ஓராண்டாகவும் ஜனநாயக வழியில் அமைதியாகத்தான் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அணு உலைக்கு எதிராக போராடுவோரின் அச்சத்தை நியாயமான வகையில் போக்க வேண்டுமே தவிர இப்படியான அடக்குமுறைகளின் மூலம் மக்கள் போராட்டங்களை நசுக்கக் கூடாது. கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான போலீசாரை திரும்ப வரவழைப்பதுடன் அறவழியில் போராடும் பொது மக்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

             தங்கள் எதிர்கால வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பாழ்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அந்த பொதுமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.



Read more...

மகிந்த இராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து செப்டம்பர் 20-ல் ரயில் மறியல் போராட்டம் - தி.வேல்முருகன் அழைப்பு

சனி, 8 செப்டம்பர், 2012

 

 

 

 

சாதி மத கட்சி எல்லைகளைக் கடந்து

தமிழராய் ஒன்று கூடுவோம்! வாரீர்! வாரீர்!!




தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மகிந்த இராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து செப்டம்பர் 20-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு


புத்தம் பேசிக்கொண்டே அப்பாவி ஈழத் தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் நித்தம், நித்தம் யுத்தம் செய்து வரும் சிங்கள இனவெறி அரசின் அதிபர் மகிந்த இராஜபக்சேவின் இந்திய வருகையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

            2011 நவம்பரில் நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்துப் பேசுகிற பா.ஜ.க. இன்று பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேசம் ராஞ்சியில் நடக்கும் புத்தர் விழாவிற்குப் பவுத்த சிங்கள இனவெறி கொண்ட இராஜபக்சேவை அழைத்திருப்பது புத்தரின் அன்பு, அகிம்சை நெறிகளுக்கே களங்கத்தை ஏற்படுத்தும் செயல் கண்டிக்கத் தக்கதாகும். ஐ.நா.வில் உறுப்பு நாடாக உள்ள இலங்கை எந்தச் சர்வதேசச் சட்டத்தின் கீழ் அப்பாவி ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில், தடைவிதிக்கப்பட்ட குண்டுகளை வீசிக் கொன்றது. தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனம், வங்கதேசம், கொசாவோ, கிழக்கு திமோர், தெற்கு சூடான் போன்ற நாடுகளில் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்த இந்தியா, ஏன் ஈழத்தமிழர் இனப்படுகொலையை இதுவரை கண்டிக்கவில்லை?


             780 பேர்கள் கொல்லப்பட்டதற்கு லிபியா நாட்டின் மீது போர்க்குற்ற விசாராணை நடத்துவதை ஆதரிக்கும் இந்தியா இலட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்ற இலங்கை மீது மட்டும் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கேட்க மறுப்பது ஏன்? நாடாளுமன்றத்தில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லக்கூடாதென்று அவைக் குறிப்பிலிருந்து நீக்குகின்ற காங்கிரசு அரசு, இன்றைய வரையில் இலங்கை மீது அய்.நா. மன்றம் போர்க்குற்ற விசாரணை நடத்தாமல் இருக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து தடுத்து வருவதைச் சர்வதேச நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன.

             இந்தியத் தமிழர்கள் என்றாலே மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்வதையே தனது வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இராஜீவ் கொலைக்கு முன்னரும் கூட மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு தமிழின விரோதப் போக்கில் நடந்து கொள்வதைப் பல காரணங்களால் நம்மால் உறுதிப்படுத்த முடியும்.


 
                விடுதலை பெற்ற பிறகு பர்மாவிலிருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு விரட்டி அடிக்கப்பட்ட போது பிரதமர் நேரு அரசு, தமிழர்களின் உடைமைகளை மீட்டுத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமதி பண்டாரநாயகா ஆட்சியில் 10.50 இலட்சம் இலங்கை மலையகத் தமிழர்கள் ஒப்பந்தம் போட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட பிரதமர்லால் பகதூர் சாஸ்திரி அரசு துணை போனது. சீனாவைப் பகைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று திபெத்தின் பவுத்த அகதிகளை வசதி வாய்ப்புகளோடு இந்தியாவில் வாழ வழிவகை செய்கிறது.


               திபெத்தில் சுதந்திர நாடு அமைக்க விரும்பும் தலாய் லாமாவை இங்கு அரச விருந்தாளியாக வைத்து மரியாதை செய்கிறது. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு மட்டும் பிற அகதிகளுக்குத் தரும் வசதிகளைக் கூட செய்து தர மறுக்கிறது. மாறாக, இலங்கை அரசின் விருப்பப்படி, விடுதலைப் புலிகள் என்ற முத்திரை குத்தி சிறப்பு முகாம்களில் அடைத்து ஈழத்தமிழர்களை வதை செய்கிறது. காங்கிரசின் தமிழின விரோதப் போக்கிற்கு மிகப் பெரிய அத்தாட்சியாக 2009 - மே, முள்ளிவாய்க்கால் போரில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, 7 1/2 கோடித் தமிழக மக்களின் வேண்டுகோளை ஏற்று போரைத் தடுத்து தமிழர்களைக் காப்பாற்றத் தவறியது காங்கிரசு அரசு.


                  ஒருபக்கம் இலங்கையைப் போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் இந்திய அரசு, மறுபக்கம் சொந்த நாட்டு மீனவர்கள் 560க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றும், இதுவரை அவர்களைத் தட்டிக் கேட்கவும் அஞ்சுகிறது. இத்தாலி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு, அதாவது கேரள மீனவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு பெற்றுத் தருகிறது. ஆனால் 560க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இலங்கையிடமிருந்து ஒரு ரூபாய் கூட நிவாரணம் பெற்றுத் தரவில்லை. இதற்காக இலங்கை கடற்படையினர் மீது எவ்வித வழக்கும் இதுவரை போட்டது கிடையாது. ஆற்று நீர்ச் சிக்கலில் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் தமிடிநநாட்டின் சட்டப்படியான உரிமைப் பங்கினைக் கர்நாடக, கேரள, ஆந்திரஅரசுகள் தர மறுக்கின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளை காலில் போட்டு மிதிக்கிற மாநில அரசுகளைத் தட்டிக் கேட்கத் தயங்குகிறது மத்திய அரசு.

                ஆனால், நெய்வேலியில் உற்பத்தி ஆகும் 2750 மெகா வாட் மின்சாரத்தில் 90 சதவீதத்தை தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களுக்குத் தாரை வார்க்கிறது. இந்திய ஒருமைப்பாடு என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களை மட்டும் இப்படி ஓரவஞ்சனை செய்வது ஏன்? இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் இராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு இணங்க மறுக்கும் இலங்கை மீது நெருக்கடி தர பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரசு உட்பட அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி 2 ஆண்டுகள் ஆகியும் கூட, மத்திய அரசு இதுவரை அதுகுறித்து வாயே திறக்கவில்லை. இதுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்கு மத்திய அரசு தரும் மரியாதையா? பற்றியெரியும் தீயில் பட்டாசைப் போடுவதைப் போல, தமிழகமே கொந்தளித்து எழுந்து கோரிக்கை வைத்தும், போராடியும், மத்திய அரசு அலட்சியமாக, இலங்கை நட்பு நாடு, அதனால் 450க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் இந்தியாவில் பயிற்சி தருவோம் என்று ஆணவத்தோடு தமிழர்களின் உணர்வுகளுக்கு சவால் விடுகிறது மத்திய அரசு.

 
               இந்தியாவைவிட, சீனா பாகிஸ்தானை எப்போதும் ஆதரித்துவரும் இலங்கை நட்பு நாடு என்றால், இந்தியாவிற்குள் வாழும் 7 1/2 கோடித் தமிழர்கள் மட்டும் எதிரிகளா? மத்திய அரசு மனசாட்சியோடு இதற்குப் பதில் சொல்லட்டும். எனவே, தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடுவதை வாடிக்கையாகச் செய்துவரும் மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கை எதிர்த்தும், நம் தமிழின உறவுகளைக் கொன்றொழித்த இலங்கை அதிபர் இராஜபக்சே ராஞ்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கேட்டு 20.9.2012 வியாழன் அன்று காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் இரயில் மறியல் அறப்போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.

Read more...

சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் - பண்ருட்டி தி.வேல்முருகன்

வியாழன், 6 செப்டம்பர், 2012








சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை  பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்


இது குறித்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சி  நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்   குறிப்பு

     விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் நேற்று  05/09/2012 பிற்கபல் நிகழ்ந்த கோர தீ விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கருகி உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இத்தகைய தீ விபத்துகள் நடப்பதும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கருகிப் பலியாவதும் வாடிக்கையாகிவருகிறது. இனியாவது இப்படி மனித உயிர்கள் கருகிப் பலியாவதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

                பட்டாசு ஆலைகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருப்பதும் இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான் தீ விபத்துக்குக் காரணம். இத்தகைய தீ விபத்துக்கு என்ன காரணம் என்பதை கண்டறிவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் பட்டாசு ஆலை நிர்வாகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய தீ விபத்து நிகழும்போது உரிய சிகிச்சை பெற அங்குபோதுமான மருத்துவ வசதி இல்லை. ஏற்கெனவே விருதுநகரில் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கூட அறிவிப்போடுதான் இருக்கிறது. அங்கு இனியாவது நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை விரைந்து அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                சிவகாசி சுற்றுவட்டாரத்தில் தீ விபத்துகள் தொடர் கதையாகிவரும் நிலையில் அங்கு நவீன தீயணைப்புக் கருவிகள் அமைக்கப்பட வேண்டும். தீயை உடனே கட்டுப்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய ஹெலிகாப்டரை அங்கு நிரநதரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இதேபோல் தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைகளை சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் அமைக்க வேண்டும். இந்த கோர தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கும் படுகாயமடைந்தோருக்கும் உரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.



Read more...

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்தினை பண்ருட்டி தி. வேல்முருகன் திறந்து வைத்தார்

சனி, 1 செப்டம்பர், 2012




தர்மபுரி :


 
          தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று (31/08/2012) பங்கேற்றார்.

        தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலக திறப்பு விழா விழாவும் கம்பைநல்லூர் பேருந்து நிலையத்தில் நேற்று காலை கொடியேற்று விழாவும் நடந்தது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு கட்சிக்கொடியை ஏற்றினார். பின்னர் பொம்மிடி பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை (31/08/2012) 7 மணி அளவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார்.


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் பேசியது:

         தமிழக வாழ்வுரிமைக் கட்சி அனைத்து சாதிகளையும் அரவணைத்து செல்லும் கட்சி. சாதி கட்சி அல்ல. காவிரி நதிநீர் பிரச்னை, முல்லை பெரியாறு அணை பிரச்னைகளை தீர்க்க போராட்டம் நடத்துவோம். தமிழக வாழ்வுரிமை கட்சியினர் எங்கு சென்றாலும் பா.ம.க.வினர் பிரச்சனை செய்கின்றனர். இவ்வாறு வேல்முருகன் பேசினார். இந்த பொதுகூட்டத்திற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பாக குவிக்கப்பட்டிருந்தனர்.



Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP