கல்வி, வேலையில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடலூரில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்

வியாழன், 29 ஜூலை, 2010

கடலூர்:

               கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி கடலூர் கிழக்கு மற்றும் வடக்கு பா.ம.க. சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய பா.ம.க. மாநில இணைப் பொதுச் செயலாளர் தி.வேல்முருகன் பேசியது: 

              வன்னியர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று 1980 முதல் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எங்களது கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை. சாதிவாரியாக மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஏனென்றால் தற்போது 80 சதவீத கல்வி, வேலை வாய்ப்புகளை ஒரு சதவீதம் பேர் மட்டுமே அனுபவிக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். பதவிகளுக்காக நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. 

             பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காகவே போராட்டம் நடத்துகிறோம். அவர்கள் இன்னமும் முந்திரிக் காடுகளிலும், வயல் வெளிகளிலும்தான் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றார் வேல்முருகன். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைப்பொதுச் செயலாளர் தி.திருமால்வளவன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பஞ்சமூர்த்தி, வடக்கு மாவட்டச் செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைமை அலுவலகச் செயலாளர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார்.

சிதம்பரம்: 

            கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முத்து.குமார் வரவேற்ரார். மாநில இணை பொதுச்செயலாளர் தி.வேல்முருகன், துணைப் பொதுச்செயலாளர் தி.திருமால்வளவன், மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் இரா.சிலம்புச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

விருத்தாசலம்: 

               விருத்தாசலத்தில் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி அருகில் பேரணி தொடங்கி பாலக்கரை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலர் திருஞானம், மாவட்ட தலைவர் சின்னதுரை ஆகியோர் பேசினர். மாவட்ட செயலர் செல்வராசு வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி தலைமை ஏற்றார். நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர்கள் ராசவேல், வெங்கடேசன், செல்வகுமார், உத்தண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Halloween Comments - http://www.halloweentext.comகடலூர் மாவட்ட செய்திகள்




Read more...

பாமக தலைவராக ஜி.கே. மணி மீண்டும் தேர்வு

சனி, 10 ஜூலை, 2010

பாமக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே. மணிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவிக்கிறார் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். உடன் அன்புமணி ராமதாஸ்
சென்னை:
            பாமக தலைவராக ஜி.கே. மணி மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.சென்னையில் வெள்ளிக்கிழமை பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஜி.கே. மணி தலைவராகவும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக அக்பர் அலி சையத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
                அமைப்புச் செயலாளராக இருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் இணைப் பொதுச்செயலாளாரகவும், அன்புமணி ராமதாஸ் இளைஞரணி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜி.கே. மணி, 1998-லிருந்து பாமக தலைவராக இருந்து வருகிறார். அதற்கு முன்பு மாநில துணைத் தலைவர், தொண்டரணி தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். இப்போது 7-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1996-லிருந்து எம்.எல்.ஏவாக இருக்கும் அவர் இப்போது சட்டப் பேரவை பாமக தலைவராகவும் இருந்து வருகிறார்.
தீர்மானங்கள்: 
             ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். இலங்கை முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சொந்த ஊரில் குடியமர்த்துவதில் மெத்தனம் காட்டி வரும் இலங்கை அரசுக்கு கண்டனம்; ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி இந்தியா வலியுறுத்த வேண்டும்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையினருக்கு கண்டனம்; கச்சத் தீவை மீட்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது. பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரிகளை மாநில அரசு குறைக்க வேண்டும், மண்ணெண்ணெய் மீதான விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். காவரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP